கவிதைகள் சிந்தித்து..
காலம் மறந்து...
கால் போன திசையில் நடந்து...
கரைந்து போன காலங்கள்
திரும்ப வருமா என்ற கனவோடு...
...சொந்த கவிதைகளை இணைய அரங்கிலேனும் அரங்கேற்றும் முயற்ச்சி!
கவிதைகள் சிந்தித்து..
காலம் மறந்து...
கால் போன திசையில் நடந்து...
கரைந்து போன காலங்கள்
திரும்ப வருமா என்ற கனவோடு...
கவிதைகளா?
கிலோ எவ்வளவு என்று தான் கேட்டிருப்பேன்
18 வருடங்களுக்கு முன்பு
என் வாழ்க்கையில் நீ வராது போயிருந்தால்...
ஆழ்ந்த இருள் போர்த்தி
அமிழ்ந்திருந்த காலங்களில்
'வெளிச்ச தண்ணீர்' தாகம் எடுத்து
வெகு தூரம் அலைந்திருக்கிறேன்...
வழி தெரியாது போய்
அருகிருந்த அசைவுகளை கேட்க
'கிழக்கு திசை பார்த்து காத்திருக்க சொல்லி'
குரல் ஒன்று சொன்னது!
வருடக் கணக்கில் காத்திருந்தும்
கீற்றாய் கூட ஒளியில்லை
கிழக்கு அடி வானில்!
திசை மாற்றி உதயம் வருமோவென்று
எண் திசை பார்த்து காத்திருந்தும்
எத்திசையும் உதிக்கவில்லை
என் மனச்சூரியன் -
"நான்" இறக்கும் நாள் வரை!
........................................
..........சென்ற வாரம் இறந்து போன
எதிர் வீட்டு ஜோசியன்
எதிர் படும் போது சொன்னான்
'என் மகன் தேடிக் கொண்டிருப்பதாகவும்,
அவன் மகன் தேட போவதாகவும்!'
***************
காதலில் திளைத்து
காமத்தில் கரைந்து
கடந்து போயிருக்கவேண்டும்!
உன்னை நானும்!
என்னை நீயும்!
உனக்கு நான் எப்படியோ
எனக்கு நீ உயிர் போகும் நேரம்
உறுத்தப் போகும்
நெஞ்சுக்குழி நினைவுகளென!
--------------------------------------------
ஒரே லயம்!
---------------------------------------------
உன்னை 'தொலைத்ததை' அறியாமல்
உன்னையல்லாத எல்லோரையும்
'தொலைத்தேன்'!
மற்ற எல்லோரையும்
தொலைத்த பின் தெரிகிறது
உண்மையில்
உன்னைத்தான்
'தொலைத்தேன்' என்று...
கூடிரண்டு
உள்ளிருக்கம் உண்மைகளால்
உரசிக்கொள்ள....
கூடியது
கூடோடு கூடியதொரு காலம்...
பின்னரெல்லாம்
தொடர்புகள்...
கூடுக்கும் கூடுக்கும் தான்
...எப்போதேனும்
விழி வழியே
உயிருக்கும் உயிருக்கும்....
கூடெடுத்ததன் காரணம் அறியாது...
கூடு கரைக்கும் மார்க்கம் உணராது...
கரைந்து போகிறது!
கூடோடு கூடிய இந்த காலம்...!
எல்லோர் கையிலும்
எப்போதும் இருக்கிறது!
வீட்டில் இருப்போர் - இல்லாதோர்
தெருவில் போவோர் - வருவோர்....
எல்லோரிடமும்!
எப்போதும்!
எப்போதும்....
இக்கரங்கள்.....
செதுக்க ஏற்ற நேரம் பார்த்தபடி....
யார் யாரோ
செதுக்குகிறார்கள்!
வீட்டில், வெளியில்...
தெருவில், தேனீர் கடையில்....
எங்கெங்கோ....
ஐய்யோ....அலுவளகங்கள்....
எந்நேரமும் கேட்கலாம்
ஏதோ ஒரு மூலையில்
செதுக்கும் ஒளிகளை!
'நல்ல' மகன்
'திறமையான' உழைப்பாளி
'பொறுப்பான' கணவன்
என எப்படி எப்படியோ...
செதுக்கி செதுக்கி
நினைத்தது வராமல்
இன்னும் இன்னும் செதுக்கள்கள்....
நிஜ உருவை
உருக்குலைத்து
உயிர் குடித்த செதுக்கள்கள்!
செதுக்க பட்ட நானும்
செதுக்க பட்ட நீயும் சேர்க்கப்பட்டோம்.
விடிந்து பார்த்தால்
ஐய்யோ.....!
என் கையிலும் இருக்கிறது
உளியும்....! சுத்தியும்....!
மழை வந்த நாளெல்லாம்
எனக்கு....
மழையில் நனைந்து
மழையாய் இருந்து பார்க்கும் ஆசை!
சிறு வயதிலேயே
என்னையும், மழையையும்
'சீக்கு வரும்' என்று சொல்லி
பிரித்து வைத்தார்கள்!
அன்று முதல்
மழையில் நனையும்
வெறும் கனவுகளில் கரைகிறது
என் மழைக்காலங்கள்!
என் நிலை இப்படி
பிறர் நிலை எப்படி?
என்று நெருங்கிய நண்பர்களை விசாரித்தால்....
ஒருவன்
போர்வையின் பயனை
அன்று தான் உணர்வேன் என்றும்,
மற்றொருவன்
மதுவின் பயன் அன்று தான் புரியும் என்றும்
இன்னும் பிற
மழையில்லா
ஆனால் மழைக்கால
செயல்கள்!
என்றேனும்
ஒரு நாள்
மழையில் நனைந்து...
மழையாய் இருந்து.....!
இதுவும்
நாம் பார்த்த
வழக்கமான வெண் திரை படங்களில்
ஒன்று தான்.
நாயகன்
நாயகியை
விரட்டி விரட்டி காதலித்து....
நாயகி
இடைவேளை வரை
விலகி விலகி...விலகி விலகி....
இடைவேளை தருணத்தில்
சம்மதம் சொல்லி...
வில்லன் அவதாரங்களும்
சிறுவர்களின்
தீபாவளி சமய
துப்பாக்கி சண்டையுமாய்
சுபத்துடன் முடியும்...
நாம் பல முறை பார்த்த
அதே வெண்திரை காவியம்!
...இருந்தும்
ரசித்து பார்க்கிறேன்
உன்னோடு சேர்ந்து நானும்!
நான் ரசிக்கும் நீ ரசிக்கும் காரணத்தால்!
விடியும் வரை...
உன் நினைவில் திளைத்து,
விடிந்த பின்....
உன் கனவுகளில் உறங்கி,
உறங்கியவுடன் விழித்து...
அன்றாட அலுவல்களை
அரை குறையாய் - அவசரமாய்
நிறைவேற்றி,
சட்டையை திருப்பி அனிந்து,
திருப்பி அனிந்ததை திருத்தி அனிந்து,
இரு விள்ளல் இட்டிலி...
ஒரு கோப்பை குடிநீர்...
அவசரமாய் பேருந்து நிலையம்
ஓடோடி வந்து சேர்ந்தால்,
கடந்து போகும் பேருந்தில்
அரை மனதாய்
ஓர் இதழோர புன்னகையுடன் நீ!
இதற்காய் இத்தனை அல்லல்
என்ற என் மனம்
அடுத்த நொடி
ஆனந்த கூத்தாடி
ஆர்ப்பரித்து குதிக்கிறது
எனக்கென நீ ஈந்த
அந்த அரை மன புன்னகைக்கென!